தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளரான இவர், கடந்த 26ம் தேதி பாரிமுனை ராஜாஜி சாலையில் பைக்கில் சென்றபோது, திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, தண்டையார்பேட்டை தாண்டவராயன் கிராமணி தெருவில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று சுந்தரராஜன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, எம்எல்ஏக்கள் எபினேசர், ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் திமுக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சுந்தரராஜன் உடல் நேற்று மாலை காசிமேடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த சுந்தரராஜனுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், பிரபாகரன், சத்தியநாராயணன் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3mvMuWt