சென்னை: சென்னை மாநகருக்கு புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வௌியூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் பூந்தமல்லி சாலை, கோயம்பேடு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, வேளச்சேரி 100 அடி சாலை உள்ளிட்ட பல சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் 5 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதில், 3 மேம்பால பணிகளை நடப்பாண்டுக்குள் தொடங்க  நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் கோயம்பேடு 100அடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை- காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ரூ.94 கோடி செலவில், 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேம்பாலப் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பொதுப்போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலை(ஓ.எம்.ஆர்) - சர்தார் படேல் சாலையை இணைக்கும் விதமாக ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படவுள்ளது. அதேபோல், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ராமாபுரம், முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலமும், மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்ப்பாலம் ஆகிய 2 பாலங்களும் ரூ.403 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படவுள்ளது. தாம்பரம் பகுதியில் கிழக்கு- மேற்கு தாம்பரம்- முடிச்சூர் பகுதியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம், இணைப்பு சாலை மற்றும் சண்முகம் சாலை-ஜி.எஸ்.டி சாலை இணைப்பு பாலம் ஆகிய பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி அடுத்த மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/3imHYqO