சென்னை: திருவல்லிக்கேணி அயோத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) சுதேசி(27). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மெரினா கடலில் மீன் பிடிக்க இயந்திரம் பொருத்தப்பட்ட படகில் சென்றார். பின்னர் மீன் பிடித்துக்கொண்டு நேற்று காலை விவேகானந்தர் இல்லம் எதிரே படகின் மூலம் கரையை கடக்க முயன்றனர். அப்போது அலையின் வேகத்தால் படகில் இருந்து எதிர்பாராத விதமாக சுதேசி கடலில் விழுந்தார். இதில் படகின் இயந்திர துடுப்பில் சிக்கிக்கொண்டார். இதில் அவரது வலது காலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக படகில் இருந்து மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆட்டோ மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3hjsQZX