சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு தேர்வை நடத்தலாம்.   சராசரி மாணவர்கள், அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமையை நிரூபிக்க, தேர்வு எழுதவே விரும்புவர். அவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கல்வித் துறை எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, ப்ளஸ் 2 தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்த விவகாரத்தில், மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக  விளக்கமளிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3x5pPD3