சென்னை: வேட்பாளர்கள் தொடர்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ.க்களின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தேர்தல் தொடர்பான பல ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், தேவையான ஆவணங்களை மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அந்த ஆவணங்களை விரைந்து வழங்குவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3hkpHJb