ஆவடி: ஆவடியில் அளவுக்கு அதிகமாக குடித்த எலக்ட்ரீசியன் நாக்கு வறண்டு பலியானார். ஆவடி, பாரதிதாசன் நகர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (24). எலக்ட்ரீசியன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி ரேவதி (22). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரகாஷ், தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரகாஷ் வேலை முடிந்து அளவுக்கு அதிமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர், அவர் வீட்டில் போதையில் தூங்கினார். அவரை மனைவி ரேவதி சாப்பிட எழுப்பினார். அப்போது, பிரகாஷ் நாக்கு வறண்டு மயங்கி கிடந்தார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/32HFBGa