சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கவர்னர்கள், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இழப்பு இந்திய மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஒரு புகழ் பெற்ற சகாப்தம் முடிந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையஎல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழிசை (தெலுங்கானா கவர்னர்): பிரணாப் முகர்ஜி நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் முன்னிறுத்துபவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.எடப்பாடி பழனிச்சாமி (தமிழக முதல்வர்): பிராணாப் முகர்ஜி மறைவு இந்தியாவிற்கே ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இதேபோல் துணைமுதல்வர், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/32G5NkB