குத்தாலம் : இயற்கை பேரிடரிலிருந்து காப்பாற்ற வீட்டின் மொட்டை மாடியில் நெல் நாற்றங்கால் அமைத்து மயிலாடுதுறை விவசாயி சாகுபடி பணிகளை துவங்கியுள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இயற்கை ஆர்வலரான இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நஞ்சில்லா பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கருப்புக்கவுனி போன்ற ரகங்களை சாகுபடி செய்ய விரும்பினார்.பொதுவாக, வயலில் நாற்றங்கால் வளர்க்க வயலில் தண்ணீர் பாய்ச்சி, உழவு செய்து, நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் வளர்ப்பதைபோல் இல்லாமல், தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார் பாலமுருகன். முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கருக்கான ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஒன்றரை ஏக்கருக்கான தூயமல்லி நாற்றங்கால்களை மாடியிலேயே உருவாக்கியுள்ளார். சேறில்லா விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயந்திர நடவுக்கான நாற்றுக்களை சேறுக்கு பதிலாக கருக்காய், தேங்காய் நார் கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு ட்ரேயில் நெல் விதைகள் பரப்பி நாற்றுக்களை வளரச்செய்துள்ளார் நாற்றுகளுக்கு தேவையான நீரை பூவாளி வைத்து பாய்ச்சுகிறார். இதனால் நாற்றுக்கள் 17 நாள்களில் நாற்றின் வேர் பகுதி சேதமாகாமல், சேறும் சகதியும் இல்லாமல் அப்படியே எடுத்து சுருட்டி நடவுக்கு அனுப்புகிறார்.இதனால், வயலில் நட்டால் நாற்றுக்கள் மழையில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இவருக்கு இல்லை. மேலும், வயலில் நாற்றங்கால் விடுவதைவிட குறைந்தளவு செலவாகிறது என்று மகழ்ச்சியுடன் கூறுகிறார். விவசாயி பாலமுருகன். மற்ற விவசாயிகளும் இதனை பயன்படுத்தி பணவிரயத்தை தவிர்க்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3BMvZcW