குன்னூர்: நீலகிரி மாவட்ட அதிமுக மாஜி எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்தார். அவரை வீட்டின் உரிமையாளரும், அவரது மகனும் அடித்து உதைத்த வீடியோ வெளியானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அதிமுக நீலகிரி மாவட்ட அவைத் தலைவராக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் 2014-2019ல் நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்பியாகவும் இருந்துள்ளார். எம்.பி.யாக பணியாற்றியபோது போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது‌. இவரின் வீடு குன்னூர் முத்தாளம்மன் பேட்டையில் உள்ளது. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மாஜி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ணன் மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் அதே பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிர்வாணமாக இருந் ததாக தெரிகிறது. இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர் நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து குன்னூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். கோபாலகிருஷ்ணனும் தான் தாக்கப்பட்டதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பான வீடியோவையும் பார்த்தனர். இதையடுத்து, வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்ததாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி, அவரது மகன் மீதும் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக மாஜி எம்.பி. மது போதையில் நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் நீலகிரி அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3o14AiH