கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரின் மனைவி, குழந்தை, மாமியார் பலியாகினர். மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கோகுல் (30). இவர், மனைவி நந்தினிபாரதி (27), மூன்று மாத குழந்தை தனயாழினி, மாமியார் அழகுராணி(46), மைத்துனர் கார்த்திகேயன் (25) ஆகியோருடன் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றார். பின்னர் குடும்பத்துடன் மாமியார் ஊரான தேனி மாவட்டம், சுப்புலாபுரத்திற்கு  அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு சென்றார். இரவு 11 மணியளவில் அடுக்கம் சாலை கிழவிப்பாறை பகுதி சாலை வளைவில் திரும்பும்போது கார் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நந்தினிபாரதி, குழந்தை தனயாழினி, அழகுராணி ஆகியோர் உயிரிழந்தனர். கோகுல், கார்த்திகேயன் இருவரும் பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |07 Nov 2021 https://ift.tt/3o4ER8T