சென்னை: கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானம் மற்றும்  ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 3 பிளாக் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதியுடன் கூடிய பன்னோக்கு  உயர் மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டன. இந்த மருத்துவமனை தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்டதாக 51,429 சதுர மீட்டரில், அதாவது 5,53,582 சதுர அடி கொண்ட கட்டிடமாக கட்டப்படவுள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான வடிவமைப்பு  விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், தற்போது, இப்பணிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதில், தற்போது முதற்கட்டமாக  6 தளங்கள் கொண்ட 3 பிளாக் கட்டப்படுகிறது. அதன்படி ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடமும், ரூ.78 கோடியில் பி பிளாக்கில்  18,725 சதுர மீட்டரில்  அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ரூ.74 கோடியில் சி பிளாக்கில் 15968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகள் கட்டிடம் என மொத்தம் 51429 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.230 கோடி மதிப்பிலான பணிகளுக்கு கடந்த 2ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து டெண்டரில் தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



from Dinakaran.com |07 Nov 2021 https://ift.tt/3ELPi82