திருமயம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் உள்ள திடலில் தடையை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மஞ்சுவிரட்டு போட்டி பாரம்பரிய முறைப்படி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனால் மஞ்சுவிரட்டு திடலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து நாலா புறமும் மிரண்டு ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.அப்போது மாடுகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து முட்டி தள்ளின. இதில் எதிர்பாராதவிதமாக பரளி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (52) என்ற பார்வையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவகோட்டையை சேர்ந்த சிவப்பிரகாஷ் (35) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மாடுகள் முட்டியதில் பலத்த காயம் அடைந்த 32 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக விராச்சிலையை சேர்ந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3kcN75M