* மூன்று மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை* ரூ.470 கோடியில் நில எடுப்பு பணிக்கு ஒப்பந்தம்* பணி முடிந்தால் 20 நிமிடத்திற்குள் செல்லலாம்சென்னை: ரூ.5,900 கோடியில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாலைப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2007ல் திமுக ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ.1,815 கோடி செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 2007ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டது. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது. இதனால், இந்த திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை, ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டிய நிலையில் அதிமுக அரசு திட்டத்தை செயல்படுத்த அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், டெல்லி சென்ற போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அதன்பின் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று எடப்பாடி அறிவித்தார். தொடக்கத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்த நிலையில், இத்திட்டம் 2018ல் ரூ.2,400 கோடியாக அதிகரித்தது. பின்னர் ரூ.3087 கோடியாக உயர்த்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.அதன்படி, சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் நிறைவடைகிறது. இந்த சாலைக்காக மொத்தம் 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. இந்த உயர்மட்ட சாலை அமைய உள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகிற 10 கிலோ மீட்டர் தூரம், கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, 2011ல் அனுமதியும் பெறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால், மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதிகோரி சென்னை துறைமுக நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தக் கூடாது, கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக் கூடாது, கட்டுமானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டமைப்புகளை திட்டம் முடிவடைந்த பின்னர் அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் கன்டெய்னர் லாரிகள், கீழடிக்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆறுவழிச் சாலையில் எங்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளது. இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்கிறது. இது, கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளது. இந்த சாலைகளில் கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படுகிறது. 10 வழிச்சாலை, அணுகு சாலை உள்ளிட்ட புதிய கருத்துகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு ரூ.1,350 கோடி மதிப்பிலான மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், 2012ல் இந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நிறைவேற்றப்படவில்லை. திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை ேநரில் சந்தித்து இந்த திட்டத்தில் 3ல் ஒரு பகுதி வேலை முடிந்து விட்டது. அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கடிதத்தை கொடுத்தார். அதன்விளைவாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் கொடுத்தோம். இந்த திட்டம் என்பது ஒரு அடுக்கு பாலமாக அமைக்க திட்டமிட்டிருந்தது. இப்போது, இரண்டடுக்கு மேம்பாலமாக அமைக்கப்படுகிறது. மதுரவாயலில் இருந்து துறைமுகம்  வரை சுமார் 20 கி.மீ தூரம் மேலடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் துறைமுகம் வரை சுமார் 14 கி.மீ தூரம் கீழடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. மேலடுக்கு சாலையில் துறைமுகத்துக்கு போகும் கனரக வாகனங்கள் சென்று விடும். கீழடுக்கு என்பது பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். 13 இடங்களில் மேம்பாலத்தில் இறங்கும் வகையில் இறங்கு பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி ரூ.5,900 கோடி ஆகும். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக நில எடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.470 கோடி வரை தேவைப்படுகிறது. இதில், மாநில அரசின் பங்கு 50 சதவீதம். மத்திய அரசின் பங்கு 50 சதவீதம். அந்த பணிகளுக்கு தான் ஒப்பந்தம் போட வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வரின் அனுமதியை பெற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. நில எடுப்பு பணிகள் முதலில் நடைபெறும். இந்த திட்டம் நிறைவேற்ற என்ன தேவையோ அதை மாநில அரசு செய்து தரும்.  தற்போது  நிதி அதிகரித்ததற்கு அதிமுக அரசு தான் காரணம். தொடர்ந்து இந்த பாலப்பணிகளை செயல்படுத்த விட்டிருந்தால் தற்போது இப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இருக்கும். ஆனால்,  அவர்கள் செயல்படுத்தவில்லை. தற்போதைய அரசு மக்கள் நலன் கருதி இந்த பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். துறைமுகத்துக்கு பொருட்கள் வருவது குறைவாக உள்ளது. இந்த திட்டம் வந்தால் துறைமுகத்திற்கு சரக்கு பொருட்கள் வருவது அதிகரிக்கும். மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்திற்கு போவதற்கு 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஆனால், இந்த பாலம் வந்தால் 20 நிமிடத்தில் சென்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், ‘மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை விரிவான திட்ட அறிக்கை 3 மாதத்தில் நிறைவடையும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், இரண்டாம் தளத்தில் மதுரவாயலில் இருந்து நேரடியாக துறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் போக்குவரத்து இருக்கும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதியில் கட்டப்பட உள்ளது’ என்றார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். துறைமுகத்துக்கு சரக்கு பொருட்கள் வருவது அதிகரிக்கும். மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்திற்கு போவதற்கு 1 மணிநேரத்திற்கு மேல் ஆகும். இந்த பாலம் வந்தால் 20 நிமிடத்தில் சென்று விடலாம்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3AVEDpN