புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று காலை சட்டசபை 4ம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சபாநாயகர்  செல்வம், காரில் வந்து கொண்டிருந்தார். சட்டசபை அருகே வந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி அதிகமாகி மூச்சுத்  திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பொது  மருத்துவமனைக்கு சபாநாயகர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,  முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்  சரவணன்குமார் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து சபாநாயகர் செல்வம் உயர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3t0DZEv