திருச்சி: பேக்கரி, பெயின்டிங் வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி வேதனையுடன் தெரிவித்தார். திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ேநற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த கல்வியாண்டிற்கான பாட புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அமைச்சர் அளித்த பேட்டி: பள்ளிகளில் கள ஆய்வுக்கு செல்லும் போது பல கருத்துக்களை கூறுகின்றனர். பல பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேட்டுள்ளனர். அதை முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்படும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் எல்கேஜி, யுகேஜி அடங்கிய ஒரு மாதிரி பள்ளிகளை ஏற்படுத்தி வருகிறோம். 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும்.  அப்போது, தற்போது 12ம் வகுப்பு முடித்து கூடுதல் மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்களும் தேர்வு எழுதலாம். இது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தால் சாத்தியம். இல்லையென்றால் அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதன்படி செயல்படும். ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் படத்துடன் வழங்கப்பட்ட குறிப்பேடு உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை மாற்றாமல் வழங்க என்ன மாற்று வழி உள்ளது என முதல்வரிடம் ஆலோசித்து வழங்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5.5 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயின்டராகவும் வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வருகின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்வரிடம் பேச உள்ளேன். எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய விடமாட்டோம். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்றார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3y6uJzX