சென்னை: கடந்த 1976ல் ‘ஓ மஞ்சு’ என்ற படத்தில் அறிமுகமானவர் கவிதா (வயது 55). தொடர்ந்து ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘அந்தமான் காதலி’, ‘இதயம் திரையரங்கம்’, ‘நாரதன்’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவலுக்கு பிறகு படப்பிடிப்பில் பங்கேற்காமல், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.இந்நிலையில், கடந்த மாதம் கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 16ம் தேதி சாய் ரூப் மரணம் அடைந்தார். தசரத ராஜுவின் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த 14 நாட்களில் கணவரையும் பறிகொடுத்த கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.



from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/3h76FXQ