சென்னை:  தமிழக அரசு நேற்று வெளிட்ட அறிக்கை:  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், தற்போது 13,41,494 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்த வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 18-2-2016ல் முடிவடைந்தது. இந்நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாரியம் திருத்தியமைக்கப்படவில்லை. கலைஞரின் வழியில் செயல்படும் இந்த அரசு, பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் கட்டுமான தொழிலாளர்களின் நலனை பேணுவதற்காக அனைத்து தரப்பு வேலை அளிப்போர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை கொண்டு, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வாறே பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமாருடன், அரசு பிரதிநிதிகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி, பொதுப்பணி ஆகிய துறைகளின் கூடுதல் தலைமை செயலாளர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளின் முதன்மை செயலாளர்கள், தொழிலாளர் ஆணையர், இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஒன்றிய அரசின் மண்டல தொழிலாளர் ஆணையரும்; வேலையளிப்போரின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளின் முதன்மைப் பொறியாளர்களும், இயக்குநர், நகராட்சி நிர்வாக துறை ஆகியோருடன் கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் பதம் துகார், இந்திய கட்டிட வல்லுநர் சங்கம் மாநில தலைவர் சிவகுமார், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென் பிராந்திய தலைவர் எல்.சாந்தகுமார்,  எம்.கே.எம்.எஸ்.கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் ஷாஜகான் சேட் ஆகியோரும்; உடலுழைப்பு தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக தர்மபுரி, நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க நிறுவனத்தின் துணை பொதுச் செயலாளர், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் செயற்குழு உறுப்பினர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மாநில செயலாளர், அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரசின் மாநில தலைவர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சங்கத்தின் உறுப்பினர், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில பேரவை அமைப்பாளர் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பர்.அதிமுக ஆட்சியில் கோமா நிலையில் வாரியம்சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொன்குமார் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் இந்த 10 ஆண்டுகளில் 17 வாரியங்கள் கோமா நிலையை அடைந்து விட்டது. எந்த செயல்பாடும் இல்லை. 60 வயது ஆனால் ஒய்வு பெற்றவர்களுக்கு வாரியத்தில் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். ஓய்வூதியம் கேட்டு 3 ஆண்டு, 4 ஆண்டு காத்திருந்து மரணம் அடைந்வர்கள் பல பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசமான நிலை இருக்கிறது.  இன்றைக்கு தொழிலாளர் திறனை மேம்படுத்துவதற்கு, படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க கட்டுமான உயர் பயிலகம் என்ற அமைப்பை, 2010ல் கலைஞர் என் தலைமையில் தொடங்கி வைத்தார். வாரியத்தில் இருந்து ரூ.50 கோடியில் செங்கல்பட்டில் 25 ஏக்கர் நிலத்தில் அந்த அகடாமி உருவாக்கப்பட்டது. இன்றைக்கு அந்த அகடாமி அப்படியே முடங்கி கிடக்கிறது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3h4rCme