சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்னமும் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தின் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இதனிடையே முதல்வர் பழனிசாமி கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், மின்சார ரயில் சேவை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 8 மாதமாக மூடியுள்ள தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை போன்றவை மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம். இருப்பினும் மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்காததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.



from Dinakaran.com |31 Oct 2020 https://ift.tt/37Xq7SY