விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்து கலவை அறையில் பட்டாசுக்கான மருந்துகளை தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

விபத்தின்போது அக்குறிப்பிட்ட அறையில் மருந்து கலவை தயாரித்துக்கொண்டிருந்த செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகுமாரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்