சென்னை : சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என அதிமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி விடை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷமிட்டு, அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் (urbaser sumeet India) ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.



from Dinakaran.com |30 Sep 2020 https://ift.tt/2HJssG3