சென்னை: தமிழகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் நீர், உணவு சம்பந்தமான நோய்கள் மற்றும்  டெங்கு போன்ற நோய்களை கட்டுபடுத்தவும், நோய் தடுப்பு பணிகளை  தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். லண்டன்,  மகாராஷ்டிரா, இந்தூர் ஆகிய இடங்களில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா பரவி  வருவதால் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் வருடத்தின் கடைசி மூன்று  மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.  குறிப்பாக  சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் மற்றும் பல இடங்களில் அதிகரித்துள்ளது.  எனவே கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர் தேங்கும் இடங்கள், டயர்கள்,  பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்ைப தொட்டி உள்ளிட்ட பல்வேறு முறைகளில்  கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். மேலும் கொசு  ஒழிப்பில் மாவட்டத்திற்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை  மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது உள்ளாட்சி அமைப்புகள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான  மருந்துகளையும், பாம்பு மற்றும்  பூச்சிகடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.  அடுத்து வரும் இரண்டு மாதங்களும் சுகாதாரத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்த மாதங்களாக கருதப்படுகிறது. எனவே நோயை தடுக்கும் வகையில் மாவட்ட  அளவில் குழுக்களை ஒன்றிணைத்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா  மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    



from Dinakaran.com |01 Nov 2021 https://ift.tt/3CJyD4g