திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம், புளியராஜக்காபட்டியில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் காளியப்பன்(55). கொய்யாப்பழ வியாபாரி. மனைவி மகாலட்சுமி. 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது 2வது பெண் குழந்தையின் பெயர் சுதா. பிறக்கும்போதே உடல், மனவளர்ச்சி இல்லை.  தற்போது 25 வயதாகும் சுதா தோற்றத்தில் குழந்தை போலவே உள்ளார். அவரால் நடக்கவோ, நீண்ட நேரம் உட்காரவோ, வாய் பேசவோ முடியாது. காது கேட்காது. கை ஜாடையில் தான் வேண்டியதை கேட்பார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் தாய் மகாலட்சுமி உயிரிழந்தார். சுதாவை கவனிக்க வேண்டி உள்ளதால், காளியப்பன்  கொய்யாப்பழ வியாபாரத்தை விட்டு விட்டார்.  சுதாவிற்கு மாற்றுத்திறனாளிக்கான மாத அரசு உதவித்தொகை ரூ.1,000ஐ வைத்து சிரமமான சூழலில் குடும்பத்தை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் சுதாவிற்கு மருத்துவ செலவு, உணவு வாங்கி கொடுக்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, சுதாவிற்கு உதவி செய்ய வேண்டும் என, காளியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3kGVxSj