சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,523 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 21  பேர் உயிரிழந்துள்ளனர்  என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து  மக்கள்  நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று   1,523 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 26,13,360 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை  மற்றும் வீட்டுத்தனிமை  என 17,085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று ஒரே நாளில் மட்டும்  1,739 பேர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின்  மொத்த எண்ணிக்கை 25,61,376 ஆக  உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்த 21 பேர் நேற்று  உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், சென்னையில் 1 பேர் என நேற்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  34,899 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று  புதிதாக 183 பேர், கோவையில் 188 பேர், ஈரோடு 129 பேர்  என 3 மாவட்டங்களில்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மற்ற மாவட்டங்களில்  பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3zxKu3Q