சென்னை:  1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று வங்கதேசம் என்ற  தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின்  பொன்விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இந்திய ராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பினைச் செலுத்தி வருகிறார்கள். தாய்நாட்டிற்காக ராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும்   தியாகம் செய்ய தயங்குவதில்லை. அவர்தம் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.  1962ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ  திடலில் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டு பாதுகாப்பு  நிதி வசூல் கூட்டத்தில், அப்போது திமுக பொருளாளராக திகழ்ந்த முத்தமிழறிஞர்  கலைஞர் சில மணி நேரங்களில் 35 ஆயிரம் ரூபாய் நிதி  திரட்டி பேரறிஞர் அண்ணாவிடம் வழங்கி, அவர் மூலம் அன்றைய முதல்வர் காமராசரிடம் வழங்கப்பட்டது. மேலும், 1971ல் போர் நிகழ்ந்தபோது, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியை சென்னைக்கு அழைத்து தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கினார். அன்றைய சூழலில் இந்தியா முழுமைக்கும் வசூலான 25 கோடி ரூபாயில், தமிழ்நாடு வழங்கிய 6 கோடி ரூபாய் என்பது நான்கில் ஒரு பங்கு நிதியாகும். ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே ராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம். நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.  இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்த வெற்றி தீபம் தென் மண்டல ராணுவத் தளபதியால் தமிழ்நாடு முதல்வரிடம்  வழங்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான்  போரில் வான்வெளி தாக்குதலை தடுத்து வணிகக் கப்பல்களை சிதறடித்து வெடிக்கச் செய்து 93,000  படைவீரர்கள் சரணடையக் காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த  ராம்சாகர், தன் சுய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் படைக்குழுவினருடன் பதுங்குக் குழியின் வழியாக முன்னேறி எதிரிப் படையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, படைகள் சரணடைய காரணமாக இருந்த கர்னல் கிருஷ்ணசாமி, இப்போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த 3 வீரர்களின்  குடும்பத்தினரையும், போரில் பங்கேற்ற 6 போர் வீரர்களையும் பாராட்டி நினைவுப்பரிசாக இந்தியா-பாகிஸ்தான் போரின்  நினைவு முத்திரைப் பொறிக்கப்பட்ட தஞ்சாவூர் தட்டினை முதல்வர் வழங்கி கவுரவித்தார்.  இவ்விழாவில், தென் மண்டல ராணுவத் தளபதி அருண், தலைமைச் செயலாளர் இறையன்பு,  பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ஜகந்நாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தமிழக மக்கள் கொடுக்கும் மரியாதை, செய்யும் உதவிகள் விலை மதிப்பற்றவை தென் மண்டல தளபதி அருண் பெருமிதம் விழாவில்,  தென் மண்டல தளபதி அருண் பேசியதாவது: ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் மரியாதை, செய்யும் உதவிகள் விலை மதிப்பற்றவை. 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடம் இருந்து ரூ.6 கோடி பணம் வசூலித்து போருக்கான நிதியை வழங்கினார். 1971ம் ஆண்டிலேயே அவ்வளவு பெரிய தொகையை வசூலித்துக் கொடுத்தார். அப்போது இருந்த ராணுவத்திற்கும் தமிழகத்திற்குமான பிணைப்பு இப்போதும் தொடர்கிறது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றிகள். பாகிஸ்தானின் அட்டூழியத்தால் வங்கதேசத்தில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் அகதிகளாக இந்தியா வந்தனர். அதன் காரணமாக போர் தொடங்கியது. இந்தியா அப்போது மிகவும் இளமையான நாடாக இருந்தது. சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படையான தேவைகளுக்கு நிதியை ஒதுக்கி செயல்பட்டு கொண்டிருந்தபோது போர் வந்தது. ஆனாலும் இந்திய மக்களின் பேராதரவில் நாம் வெற்றி பெற்றோம். இந்திய ராணுவம் சார்பில் பல இளம் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தால் நாம் இன்று அமைதியாக வாழ்ந்து வருகிறோம். 



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3jaahIJ