சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள்  செய்யவும், குவாரி  மாபியாக்களையும் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம். 4 வாரங்களில் விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணையை தள்ளிவைத்தனர்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3x6FWjW