சென்னை: ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்டிருந்த அரசு பஸ்களின் சேவை இன்று முதல் துவங்கியது. ஒரு பஸ்சில் 24 பேர் மட்டுமே பயணிக்க முடியும். மார்ச் 24ம் தேதி நள்ளிரவு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சென்னை, கோவை, மதுரை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்களில் இருந்து பஸ்களை இயக்குவதை நிறுத்தியது. அரசு பஸ்களின் சேவையை துவங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.இதையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம் அரசு பஸ்களை இயக்குவதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை இன்று முதல் 3300 பஸ்களுடன் துவங்குகிறது. பஸ்களின் டயர்களில் காற்றின் அளவு சோதனை செய்யப்பட்டு, போல்ட் சரியான நிலையில் இருக்கிறதா எனவும் சோதனை செய்யப்பட்டது.சென்னை மாநகர பஸ்கள் எங்கு வரை செல்லும்?சென்னையில் இன்று முதல் 3 ஆயிரத்து 300 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை பிராட்வே, கோயம்பேடு மாநகர பஸ் நிலையங்களில் இருந்து திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்கனவே பஸ்கள் இயக்கப்பட்டது.தற்போது, மாவட்ட எல்லைக்குள் என்று வரையறுக்கப்பட்டாலும், சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் சென்னை மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, சென்னையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையும், ஜி.எஸ்.டி.சாலையில் கூடுவாஞ்சேரி வரையும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையும், செங்குன்றம் சாலையில் பாடியநல்லூர் வரையும், திருவொற்றியூர் சாலையில் மீஞ்சூர் வரையும் பஸ்கள் இயக்கப்படும்.பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்காக பல்வேறு வழிமுறைகள் மேலும் பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்காக பல்வேறு வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பின்புறமாக ஏறும் போது, அங்கு சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அதில் தங்களது கைகளை பயணிகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் உடல்ரீதியான தொடர்புகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வ்வொருமுறையும் பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். பயணிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும்.அனைத்து டிரைவர்கள் மற்றும் பிற உள் ஊழியர்கள் தங்களது ஷிப்ட்டை துவங்குவதற்கு முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளின் இயக்கத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். * ரூ.1,000 பாஸ் குறித்து ஆலோசனைசென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, அடையாறு, அயனாவரம், வடபழனி, தி.நகர் என 28 இடங்களில் டெப்போக்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக தினசரி 3,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், பயணம் செய்வோரின் வசதிக்காக ரூ.1,000 பாஸை போக்குவரத்துக்கழகம் வழங்கி வருகிறது. இவற்றை வழங்குவதற்கான மையங்கள் அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர் என 29 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பாஸ் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து ரூ.1,000 பாஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. எப்போது வழங்கப்படும், நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



from Dinakaran.com |01 Sep 2020 https://ift.tt/2Dhx18H